அமுதம் அங்காடிகளில் ரூ. 499-க்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு விற்பனையை தமிழ்நாடு அரசு இன்று தொடக்கிவைத்தது.
இதுதொடர்புடைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"பண்டிகைக் காலங்களைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை லாபநோக்கமின்றி ரூ. 499-க்கு அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு என்ற பெயரில் இன்று சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
மஞ்சள் தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருள்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த மளிகைத் தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணா நகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.