

புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் குடியிருப்புகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து மாநகர காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதிலும் களைகட்டும். சென்னையிலும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நேரத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாகவும் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு இடையுறு ஏற்படாத வகையில் போக்குவரத்து மாற்றங்களையும் அறிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள்
காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும்.
அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.
அடையாறில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் பசுமை வழிச்சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு மந்தைவெளி, லஸ் மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.
டாக்டர் ஆர்.கே. சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு சாந்தோம் சாலை மற்றும் பசுமை வழிச்சாலையை அடையலாம்.
வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
பாரி முனை சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வழி செல்லலாம்.
தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு சாலையிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது.
கொடி மரச் சாலையில், இரவு 8 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
பசுமை வழிச்சாலையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஆர் கே மட் சாலையில் உள்ள திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, ஆர்கே மட் சாலை வழியாக செல்லலாம்.
கட்டுப்பாடுகள் என்ன?
இன்றும், நாளையும், சென்னை மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை!
மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்ல அனுமதி இல்லை.
பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை.
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
இன்று இரவு 9 மணியில் இருந்து சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன..
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 30 கண்காணிப்பு, சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Following the New Year celebrations, the Greater Chennai Police has imposed restrictions, banning the bursting of firecrackers in residential areas.