தனியார் வாகனங்களின் வாகனங்களில் தாங்கள் பணிபுரியும் துறை சார்ந்த ஸ்டிக்கர்கள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் தடை விதித்துள்ளது.
மே 2 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனிநபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிமறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், காவல் துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.
இதைச் சரி செய்ய மே 1 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.