போதைப் பொருள்கள் எதிர்கால தலைமுறையை அழித்துவிடும்: ஆளுநர் ஆர்.என். ரவி

"கல்வி நிறுவனங்கள் தங்களுடைய வளாகங்களில் போதைப் பொருள்கள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்."
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப்படம்)
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப்படம்)ANI

மிகவும் அடிமையாக்கும் தன்மையைக் கொண்ட போதைப் பொருள்களைப் பரிசோதிக்காமல் விட்டால், விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கும்பல் சிக்கியதிலிருந்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் குறித்த விவகாரம் பூதாகரம் ஆனது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தன. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியும் போதைப் பொருள் புழக்கம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு மற்றும் திமுக தரப்பிலிருந்து இதற்குத் தொடர்ச்சியாக விளக்கம் தரப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் தடுப்பு குறித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சார்பில் ஏற்கெனவே போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக பாஜகவும் நாளை மறுநாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று நேரில் சந்தித்தார். தமிழ்நாட்டில் நிலவி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து அவரிடத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து, அதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், போதைப் பொருள்கள் விழிப்புணர்வு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சமீபத்தில் கணிசமான அளவில் போதைப் பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களின் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக தமிழ்நாட்டிலும் மற்ற இடங்களிலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக நிலவிய நமது மோசமான அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தங்களின் பிள்ளைகளின் நிலை குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், கடந்த ஓராண்டாக மாநிலத்தில் உள்ள கல்வி வளாகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் போன்றவற்றில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பது குறித்த தங்களுடைய தீவிர கவலையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக என்னிடம் பகிர்ந்து வந்தனர்.

மத்திய உளவுத் துறை, புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில், நமது மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களை கண்டறிந்துள்ளன. இந்த போதைப்பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும் அழிவை ஏற்படுத்தவும் கூடியது. இதை பரிசோதிக்காமல் விட்டால் விரைவில் அது நமது எதிர்கால தலைமுறையையே அழித்துவிடும். போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. துல்லிய அவசர நடவடிக்கை உணர்வுடனும் மிகுந்த முன்னுரிமையுடனும், இந்த அச்சுறுத்தலைக் கையாள வேண்டும். மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள், தங்கள் பணிகளை செய்யும் அதே வேளையில், நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகங்கள் இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான்: தயவு செய்து இதுபோன்ற சலனங்களில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் இது உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு அழித்துவிடும். இத்தகைய போதைப்பொருள்கள் தங்களுடைய வளாகத்திலோ அருகாமையிலோ நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது. நமது மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in