திருக்குறளில் நேர்ந்த பிழைக்கும் ஆளுநர் அல்லது ஆளுநர் மாளிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13 அன்று மருத்துவர் நாள் (ஜூலை 1) விழாவை முன்னிட்டு "எண்ணித் துணிக" நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு நிபணத்துவ மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஆளுநர் ஆர்.என். ரவி இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில், மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் 50 ஆளுமைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆளுநர் ஆர்.என். ரவி கௌரவித்தார். மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசில் திருவள்ளுவரின் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது.
"செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மண்ணுஞ்சொல் மேல்வைப் பட்டு" என்பது அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இது திருக்குறளே இல்லை என்பது தெரியவந்தவுடன் பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கும் ஆளுநருக்கோ அல்லது ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தற்போது சரியான திருக்குறள் பொறிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆளுமைகளுக்குத் தனித்தனியாக நினைவுப்பரிசுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெரியாமல் நடந்த தவறுக்கு மருத்துவர் மன்னிப்பு கோரிய நிலையில், இப்பிரச்னையை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
TN Governor RN Ravi | Governor RN Ravi | RN Ravi | Doctor's Day