

பொறுப்புணர்வு இன்றி பத்திரிகையாளர் கேட்டது மன்னிப்பே கிடையாது, அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நடிகை கௌரி கிஷன் தெரிவித்துள்ளார்.
அதர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கடுமையான பதிலளித்த கௌரி கிஷன், “இது முட்டாள்தனமான கேள்வி, என் உடல் எடையைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பதிலளித்தார். அதன்பிறகு கேள்வி கேட்ட பத்திரிகையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்தக் காணொளி இணையத்தில் பரவியது.
இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தரப்பில் இருந்து நடிகைக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
அதன்பின்னர் சம்பவம் குறித்து நீண்டதொரு பதிவை வெளியிட்ட நடிகை கௌரி கிஷன், “சம்பந்தப்பட்ட நபரை குறிவைத்து துன்புறுத்துவது என் நோக்கம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் ஆர்.எஸ். கார்த்திக்கும் வருத்தம் தெரிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கதாநாயகன் நடிகையைத் தூக்கினார் என்பதற்காக விளையாட்டுத் தனமாக கேட்கப்பட்டது. அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது” என்று கூறி, வருத்தம் தெரிவிப்பதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பொறுப்புணர்வு இன்றி கேட்கப்படுவது மன்னிப்பே கிடையாது என்று நடிகை கௌரி கிஷன் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
”பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே கிடையாது. அதுவும் “விளையாட்டுத் தனமான கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்” என்றும் “நான் யாரையும் உருவ கேலி செய்யவில்லை” என்றும் கூறி வெளியிடும் நாடகத்தனமான வருத்தத்தையும் ஆழமற்ற வார்த்தைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்னும் முயலுங்கள் ஆர்.எஸ். கார்த்திக்” என்று பதிவிட்டுள்ளார்.
Actress Gouri Kishan stated, "An apology without accountability isn’t an apology at all," in reference to YouTuber RS Karthik's apology video.