மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) சார்பில் விஜயசீலன் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என நேற்று அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் வரும் 24-ல் அறிவிக்கப்படுவார் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் போட்டியிடுவார் என ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில், சைக்கிள் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது.