
விதிகளை மீறிச் செயல்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் உள்பட 4 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998-ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்நிலையில், 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் 4 பிரதிநிதிகள் மீது அரசு, அச்சட்டத்தின் பிரிவு 52-ன் கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்
சென்னை மாநகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம் (திமுக),
சென்னை மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் வ. பாபு (திமுக)
தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 3-வது மண்டலக் குழுத் தலைவர் ச. ஜெயபிரதீப்
உசிலம்பட்டி நகராட்சி 11-வது வார்டு கவுன்சிலர், நகர்மன்றத் தலைவர் க. சகுந்தலா