தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நல்லதம்பி பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, தான் கட்சியிலிருந்து விலகுவதாகச் சொல்லவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் செயர்குழுக் கூட்டம் கடந்த 30 அன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய இளைஞரணிச் செயலராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.
தேமுதிக இளைஞரணிச் செயலராக இருந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், நல்லதம்பி துணைப் பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு நல்லதம்பி கடிதம் எழுதியுள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என நல்லதம்பி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தன்னை விடுவிக்காதபட்சத்தில் கட்சியிலிருந்தே தான் விலகிக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தேமுதிகவிலிருந்து தான் விலகிக்கொள்வதாகச் சொல்லவில்லை என நல்லதம்பி காணொளி வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட நல்லதம்பி, அப்போதைய திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியைத் தோற்கடித்து சட்டப்பேரவைக்குத் தேர்வானார்.