

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற நிறைய வாய்ப்பிருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் நினைவேந்தல் தினத்தையொட்டி அவர்களது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
”விஜயுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு நான் அவர் கட்சி தொடங்கிய காலத்திலேயே நான் பதில் சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் எப்படியோ நடந்துவிட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அங்கு சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தால் என்ன? அவர் இடத்திற்குக் கூட்டி வந்து வைத்து ஆறுதல் கூறினால் என்ன? மக்களுக்கு விஜய் அனுதாபம் தெரிவிக்கிறாரே அதைத்தான் நாம் பாராட்ட வேண்டுமே ஒழிய அதற்குள்ளே நுழைந்து சில பல காரணங்களைச் சொல்லிக்கொண்டு இருப்பது சரியாக இருக்காது என்பதே எங்களின் நிலைப்பாடு.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவது வழக்கமான வரலாறுதான். ஆர்.பி. உதயகுமார் கூறிய கருத்துகளுக்கு நான் இதுவரை பதில் சொன்னதே இல்லை. அதிமுகவை இந்த நிலைமைக்குக் கொண்டு சேர்த்திருப்பதே அவரது சுயநலம்தான். இன்றைக்கு எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக பிரிந்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி இடையில் சண்டை நிலவுகிறது. இதனால் திமுகவுக்கு வாய்ப்பு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் திமுகவுக்கு ஏன் வாய்ப்பு இருக்கிறது என்றால் எதிர்க்கட்சிகள் பிரிந்திருக்கின்றன. இதை நான் சொல்லவில்லை. என் மீது பழியைப் போட்டுவிடாதீர்கள். மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அரசியலில் யாருடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருப்பது உங்கள் கையிலோ என் கையிலோ கிடையாது. மக்களின் கைகளில் உள்ளது” என்றார்.
Former Chief Minister O. Panneerselvam has stated that DMK has a high chance of winning again in the 2026 Tamil Nadu Assembly elections.