
சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோடைக் காலத்தில் அதிகமாக விற்பனையாகும் பழங்களில் பிரதானமான இடம் தர்பூசணிக்கு உள்ளது. ஒவ்வொரு கோடைக் காலத்தின்போதும் தர்பூசணிப் பழங்களின் விற்பனை களைகட்டும்.
இந்நிலையில், நிறத்தை அதிகரிப்பதற்காக செயற்கை முறையில் தர்பூசணிப் பழங்களில் ஊசி வழியாக ரசாயனங்கள் செலுத்தப்படுவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் குற்றம்சாட்டினார். இது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதன் தொடர்ச்சியாக தர்பூசணி வாங்குவதை பொதுமக்கள் பெருமளவில் தவிர்க்கத் தொடங்கியதால், அதன் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தர்பூசணி விவசாயிகள் கவலை தெரிவித்த பேட்டிகளை செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.
இதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கண்டித்து, நேற்றைக்கு முந்தைய தினம் (ஏப்.3) சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தர்பூசணிப் பழங்களை கீழே போட்டு உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் செயலால் தர்பூசணிப் பழங்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகக் கூறி, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட கோரிக்கை விடுத்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து, இது குறித்து விளக்கமளித்த உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணிகள் கண்டறியப்படவில்லை என்றும், பொதுமக்கள் பயப்படாமல் தர்பூசணிகளைச் சாப்பிடலாம் என்றும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்கு சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தை, திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் கூடுதலாக கவனிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.