
வளசரவாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
சென்னை வளசரவாக்கம் சௌத்ரி நகரில் உள்ள மதிப்புமிக்க பிரபல தனி வீடு ஒன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் வீட்டுக்குள் சிக்கியிருந்தார்கள். தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
முதலில் வந்த தீயணைப்பு வாகனத்தால் தீயை அணைக்க முடியாததால், மேற்கொண்டு மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 1 மணிக்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முதலில் ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது. விசாரணையில் மீட்கப்பட்டவர் ஸ்ரீராம் என்பது தெரியவந்தது.
தீ விபத்து நிகழ்ந்த வீட்டுக்குள் ஸ்ரீராமின் தந்தை நடராஜன் (70) மற்றும் தாய் தங்கம் சிக்கியிருந்தார்கள். இவர்கள் இருவரையும் மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். எனினும், இருவரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் சற்று பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தீ விபத்து குறித்து வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.