ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

கடந்த 2023-ல் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் இளங்கோவன்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
1 min read

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்.

தந்தை பெரியாரின் அண்ணன் மகன் ஈவிகே சம்பத்தின் மகனாவார் ஈவிகேஎஸ் இளங்கோவன். 1948-ல் பிறந்த இளங்கோவன், தன் தந்தையின் வழியைப் பின்பற்றி ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணையமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் இளங்கோவன்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, கடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2023-ல் மாரடைப்பு காரணமாக திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் இளங்கோவன்.

கடந்த நவம்பர் 27-ல் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இளங்கோவன். இந்நிலையில் இன்று காலை 10.12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in