ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 அன்று காலை தொடங்கியது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று மட்டும் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர், நாம் தமிழர் வேட்பாளர், சுயேச்சைகள் உள்பட இதுவரை மொத்தம் 66 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
ஜனவரி 18 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.