
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான 2-ம் கட்டத் தேர்வில் பெரும்பாலான தமிழகத் தேர்வர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
சென்னை வாரியத்தில் 493 உள்பட நாடு முழுவதும் 18,799 காலிப்பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வுகள் நடைபெற்று சென்னை வாரியத்தில் 6,315 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதையடுத்து 2-ம் நிலைத் தேர்வு மார்ச் 19, 20-ல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி. சு. வெங்கடேசன், எக்ஸ் தளத்தில் பதிவு எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.