
கோகுலம் சிட்ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கோகுலம் சிட்ஃபண்ட் நிதி நிறுவனம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரம், புது டெல்லி என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிட்ஃபண்ட் தொழிலில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 4) காலை தொடங்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகுலம் சிட்ஃபண்டில் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2017-ல் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், மூன்று மாநிலங்களில் இருந்த கோகுலம் சிட்ஃபண்ட் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரூ. 1,107 கோடி வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அப்போது வெளியான செய்திகளில் தகவல் தெரிவிக்கப்பட்டன.
கோகுலம் சிட்ஃபண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கோகுலம் கோபாலனுக்குச் சொந்தமான ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம், லைகா புரொடக்ஷன்ஸ், ஆஷிர்வாத் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து அண்மையில் வெளியான எம்புரான் படத்தை தயாரித்திருந்தது.