
தமிழக மக்கள் பிரச்னைகளுக்காகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்தித்துப் பேசியதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 25) தலைநகர் தில்லிக்கு சென்றார். அங்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று தன் எக்ஸ் கணக்கில் அமித்ஷா பதிவிட்டார்.
இந்நிலையில், தில்லி விமான நிலையத்தில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
`மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றோம். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைப்பது காலதாமதமாவது குறித்து விவரித்து, அதை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான நிதியை விடுவிக்கவேண்டும் என்றும், தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தொடரவேண்டும் என்றும், மக்களவை தொகுதி மறுசீரமைப்பை தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும், கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அத்துடன் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதை முழுமையாக விசாரித்து, தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டிருக்கிறது என்பதையும், போதைப் பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்’ என்றார்.
கேள்வி: அதிமுக பாஜகவுக்கு இடையே கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது என்று ஏற்றுக்கொள்ளலாமா?
பதில்: அப்படி எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைகளுக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.
கேள்வி: பல மாதங்களுக்குப் பிறகு நேற்று அமித்ஷாவைச் சந்தித்து பேசியுள்ளீர்கள். நிச்சயமாக அரசியல்ரீதியாக பேசியிருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
பதில்: தமிழக மக்கள் பிரச்சனையை விளக்கமாக அவரிடம் பேசினோம். ஏறத்தாழ 40-45 நிமிடங்கள் ஒவ்வொரு திட்டமாக விளக்கினோம். மோசமான சூழலில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறினோம்.