
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் கூறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் இன்று (ஏப்.11) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்லூர் ராஜு கூறியதாவது,
இன்று எடப்பாடியும், அமித்ஷாவும் சந்திக்கவிருப்பதாகவும், அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து?
இது குறித்து எங்கள் பொதுச்செயலாளர் பதிலளிப்பார். அந்த சந்திப்பு, சந்திப்புக்குப் பிறகு நடப்பது குறித்தெல்லாம் அவர் கூறுவார். என் தொகுதி குறித்தும், நான் சட்டப்பேரவையில் பேசியது குறித்தும் ஏதாவது கேளுங்கள்.
வலிமையான தலைவியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தார். இப்படியெல்லாம் தில்லிக்கு அவர் சென்று வந்தது இல்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பயத்தை உருவாக்கி இந்த கூட்டணியை அமைக்கப் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக பலமிழந்து காணப்படுகிறதா?
நீங்கள் அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம். எங்கள் அம்மா (ஜெயலலிதா) இரும்புப் பெண்மணி, சிங்கப் பெண்மணி என்று உலகமே கூறும். எங்கள் அம்மா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாயக்கூடியவர். எங்கள் பொதுச்செயலாளர் யாரிடமும் சென்று வலுக்கட்டாயமாக யாரிடமும் கேட்கமாட்டார். சிங்கப் பெண்மணி அம்மா என்றால், அவரது வாரிசுதான் இந்த சிங்கக்குட்டி எடப்பாடி.
அண்ணாமலையை மாற்றப்போவது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?
இந்த விவகாரத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியும் அல்ல, வருத்தமும் அல்ல. அந்த கட்சியில் எடுக்கப்பட்டது, அதன் உட்கட்சி நடவடிக்கை. அவரை மாற்றவேண்டும் என்று எங்கள் தலைவர் எடப்பாடியும் கூறமாட்டார், நாங்களும் அவ்வாறு நினைக்கமாட்டோம். இது அவர்களின் கட்சி விவகாரம்.
எங்கள் கட்சியிலும் அதேபோல் நடப்பதில், வேறு யாரும் தலையிடமுடியாது. இது குறித்து எங்கள் பொதுச்செயலாளரிடம் கேட்டால், விளக்கமாகப் பதிலளிப்பார்.