
மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக்கோரி அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தர்னா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தார்கள்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச் சாவடி, விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.
2024 ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழுக் கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்து போராடிய தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.