
`திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கடந்த 200 நாட்களில் 595 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் நடந்துள்ள கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம்:
`ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி என்று பாடினார் புரட்சித் தலைவர்.
புரட்சித்தலைவரின் ரசிகன் நான், அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்' என்று தேவைக்கேற்றார்போல், சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று வக்கணை பேசும் ஸ்டாலின் அவர்கள் நான் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்த பின்னரும் காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல் வைத்திருப்பது, நாள்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களின் மூலம் நிரூபணமாகிறது.
திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கடந்த சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்தினால், `அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்’ என்பதை நினைவூட்டுகிறேன்’.