மோடி வேண்டாம் என்றால் வேறு யார்?: இளையராஜா கேள்வி

"இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீங்கள் நாட்டை ஆள வேண்டும் என எனக்குப் பிரார்த்தனை இருப்பதாக அவரிடம் கூறினேன். அது நடக்கிறது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

பிரதமர் நரேந்திர மோடி வேண்டாம் என்று மக்கள் ஏற்கும் வேறொரு தலைவரின் பெயரைக் குறிப்பிடுங்கள் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் MyGovIndia யூடியூப் பக்கத்துக்கு இளையராஜா நீண்ட நேர்காணல் கொடுத்துள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் உயர்வாகப் பேசியுள்ளார்.

பத்மவிபூஷண் விருது குறித்த கேள்விக்கு இளையராஜா பதிலளித்ததாவது:

"எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. பிரதமரால் (நரேந்திர மோடி) தான் எனக்கு அந்த விருது கிடைத்தது. அவர் என் மீது கனிவாக இருப்பார். என்னுள் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை.

தனிப்பட்ட முறையில் நான் பிரதமரைச் சந்தித்ததே இல்லை. அலைபேசி வாயிலாகவே என்னுடைய 80-வது பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து கூறினார். அவராகவே அழைத்து வாழ்த்து கூறினார்.

விழாவுக்குப் பிறகு தேநீர் விருந்து நடைபெற்றது. அப்போதுதான் பிரதமரைச் சந்தித்தேன். இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீங்கள் நாட்டை ஆள வேண்டும் என எனக்குப் பிரார்த்தனை உள்ளது என்று அவரிடம் கூறினேன். அது நடக்கிறது. 6 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் 14 ஆண்டுகள் மீதமுள்ளன" என்றார் இளையராஜா.

பிரதமர் மோடி மீதான பார்வை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த இளையராஜா கூறியதாவது:

"மௌண்ட்பேட்டன் காலத்திலிருந்து இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த பிரதமர்கள் அனைவரையும் பட்டியலிடுங்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அதன்பிறகு, இந்தியாவுக்காக மோடி என்ன செய்தார் என்பதைப் பட்டியலிடுங்கள். உங்களால் வித்தியாசத்தை உணர முடியும்.

காசி விஸ்வநாதர் கோயிலைப் புனரமைத்தது யார்? நான் முதன்முறையாக 1988-ல் காசிக்குச் சென்றேன். சிறுநீர் கழிக்கும் இடங்களாக இருந்தன. காசி விஸ்வநாதர் கோயில் அதுமாதிரிதான் இருந்தது. தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. இதை யார் செய்தது?

மிகவும் சுத்தமான நீர் என்றால் அது கங்கை நதி. மக்கள் அதை அசுத்தம் செய்து வந்தார்கள். பிரதமர் மோடி தான் இதைச் சீர் செய்ய சரியான திட்டங்களைக் கொண்டு வந்தார். இன்னும் இதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், நாட்டின் மீது பற்று இல்லாவிட்டால், இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியாது. பல மகான்கள், ஞானிகள், சித்தர்கள் இருந்த நாடு இது.

மோடி வேண்டாம் என்றால், வேறொரு தலைவரின் பெயரைக் குறிப்பிடுங்கள். அல்லது 10 தலைவர்களின் பெயரைக் குறிப்பிடுங்கள். ஆனால், அனைத்து இந்திய மக்களும் அந்த நபரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி யாரேனும் உள்ளார்களா?

இது எனது தாழ்மையான கருத்து" என்றார் இளையராஜா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in