
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோம், அதில் ஒன்றைக்கூடவா மத்திய பட்ஜெட்டில் சேர்க்க மனம் வரவில்லை என 2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
2025-2026-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) காலை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,
`மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோம், அதில் ஒன்றைக்கூடவா மத்திய பட்ஜெட்டில் சேர்க்க மனம் வரவில்லை?
நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டங்கள் என எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு.
பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏன்? தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?
மத்திய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் மத்திய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது.
திட்ட விளம்பரங்களில் மத்திய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும், செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரத்தை மட்டுமே பாராட்டும் மத்திய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.
வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட பட்ஜெட் மூலமாக இந்திய மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பாஜகவின் நாடகம் தொடர்கிறது.
எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் மத்திய நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்றார்.