விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த புகழேந்தி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையிலிருந்து நேற்று விழுப்புரம் சென்ற புகழேந்தி, தேர்தல் பிரசார மேடையில் மயக்கமடைந்தார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளார்கள்.
அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட புகழேந்தி, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2019 விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.