விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த புகழேந்தி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையிலிருந்து மார்ச் 5-ல் விழுப்புரம் சென்ற புகழேந்தி, தேர்தல் பிரசார மேடையில் மயக்கமடைந்தார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் புகழேந்தியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், புகழேந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.