

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை உருவாக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி ஆளும் திமுக, தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பைக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் - வணிக அமைப்புகள் இளைஞர்கள் விவசாய அமைப்புகள் தொழிலாளர் அமைப்புகள் தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு, பெயர்கள் பட்டியலிடப்படுள்ளன.
அதன்படி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், வர்த்தக அணி துணைத் தலைவர் கோவி. செழியன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி ராஜா, அயலக அணிச் செயலாளர் எம்.எம். அப்துல்லா, செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு), சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு ஆகியோர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.
DMK General Secretary, Duraimurugan has announced the the party's election manifesto drafting committee headed by MP Kanimozhi