2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கழகத் தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் "ஒருங்கிணைப்புக் குழு" அமைக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவிலும் இவர்கள் 5 பேர் இடம்பெற்றிருந்தார்கள். மக்களவைத் தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.