போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாஃபர் சாதிக் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்கள், ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ளத் தயார் என்று இயக்குநர் அமீர் தெரிவித்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக நேற்று அவகாசம் கோரியிருந்தார்.
ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக என்சிபி-க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தில்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.