போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாஃபர் சாதிக்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இந்தக் காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இது இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாஃபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தில்லி சிறப்பு நீதிமன்றம் இவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதனிடையே, ஜாஃபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.