
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்புடைய காணொளியில் அவர் கூறியதாவது:
"தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்து வரும் சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை பிற்பகல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது, பலத்த காற்றானது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
சென்னையிலிருந்து 380 கி.மி. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
முன்பு, புயலாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் புயலுக்கு ஃபெங்கல் என சௌதி அரேபியாவால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.