

வங்கக் கடலில் உருவாகவுள்ள மோந்தா புயல் ஆந்திரத்தில் கரையைக் கடக்கவுள்ள இடம் குறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
"தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது. இன்று (அக்டோபர் 25) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்குப் பகுதியில் 970 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அக்டோபர் 26 அன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அக்டோபர் 27 அன்று காலை புயலாக மாறுகிறது. அக்டோபர் 28 காலை தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது. இந்தப் புயலானது ஆந்திரக் கடலோரப் பகுதியில் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே அக்டோபர் 28 அன்று மாலை/இரவு தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும். கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் உருவாகும் அக்டோபர் 27 அன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரப் புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் அக்டோபர் 28 அன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Cyclone Montha is very likely to cross Andhra Pradesh Coast between Machilipuram and Kalingapatnam as Severe Cyclonic Storm
Rain Alert | Red Alert | Yellow Alert | Orange Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area | Arabian Sea | Andaman Sea | Montha Cyclone | Cyclone Alert | Weather Update | North East Monsoon | Cyclone Montha |