
ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று (நவ.30) இரவு 11 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை வரை கடலூருக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஃபெஞ்சல் புயல் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் மேற்குப் பகுதி நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு இது மேலும் வலுவிழக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடுத்த 24 மணிநேரத்தில் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.