சென்னையில் மிகக் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் | Rain Alert | Chennai Rain |

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செவ்வாய் காலை 8 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Cyclone Ditwah: Orange Alert issued for Chennai for the next 24 hours
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
1 min read

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை ஒட்டி மையம் கொண்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது இலங்கையில் பலத்தத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்கியது. டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை ஒட்டி நகர்ந்து வந்த டிட்வா புயல் சென்னை அருகே வந்தடைந்துள்ளது. ஞாயிறு மாலைப் பொழுதில் சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதியை வந்தடைந்த டிட்வா புயலானது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. சென்னையை ஒட்டியே இது நிலைகொண்டிருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது.

இதன் எதிரொலியாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செவ்வாய் காலை 8 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்கள் எதற்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. காலை முதல் மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

Rain Alert | Chennai Rain | Chennai Rains | Orange Alert | Cyclone Ditwah |

logo
Kizhakku News
kizhakkunews.in