
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை காவல் ஆணையரகத்தில் இன்று (ஏப்.30) புகார் மனு அளித்துள்ளார். தன் புகார் மனுவில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இடும்பாவனம் கார்த்திக் கூறியதாவது,
`நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அடையாளமில்லா உதிரிகள் சிலர் பதிவிட்டுள்ளார்கள். அதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளோம்.
தொடர்ச்சியாக இது போன்ற பதிவுகளைப் பார்த்து வருகிறோம். சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசுவது, தனி நபர் தாக்குதல் தொடுப்பது, ஆபாசமாகப் பேசுவது, உச்சபட்சமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஒருவேளை இதுபோல முதல்வர் ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தால் (சம்மந்தப்பட்ட நபரை) இன்றைக்குக் கைது செய்திருப்பார்கள்.
வெளிப்படையாகத் தலையை வெட்டுவோம் என்று பதிவிட்டு பட்டாக்கத்தி படத்தை போடுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அனைவருக்கும் பொதுவானது; ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கையை எதிர்பார்த்து, ஜனநாயகத்தை நம்பி புகார் அளித்துள்ளோம்’ என்றார்.