
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழக அரசின் முன்னெடுப்பிற்கு துணை நின்ற அதிமுகவிற்கு நன்றி தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் பேசியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கடந்த மார்ச் 22 அன்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர், பல்வேறு மாநில அரசியல் கட்சிகளின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) முதல்வர் ஸ்டாலின் பேசியாதாவது,
`காலங்காலமாக கடைபிடித்து வரக்கூடிய மரபுக்கு இணங்க நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து பேரவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
2026-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றை பாதிக்கும் அபாயத்தையும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்து இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14-2-2024 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 05-03-2025 அன்று கூட்டி இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற மறுசீரமைப்பை கடுமையாக எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவேண்டும் என்றும், பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்லும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக இந்த முன்னெடுப்புக்கு துணை நின்ற தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கெடுத்த அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.