
தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மஹாராஷ்டிர மாநிலத்தில் மராத்தியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்ததை முன்வைத்து, மத்திய அரசுக்குப் பல்வேறு கேள்விகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக்கி மஹாராஷ்டிர மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஹிந்தியை கட்டாயப் பாடமாக்கும் முடிவைக் கைவிடுமாறு, அம்மாநிலத்தின் மொழி ஆலோசனைக் குழு முதல்வர் ஃபட்னவீஸுக்குக் கோரிக்கை வைத்தது.
அதன்பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஃபட்னவீஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `ஹிந்தியை திணிக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறு. மஹாராஷ்டிரத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம். வேறு எதுவும் கட்டாயமல்ல’ என்றார்.
இந்நிலையில், இது குறித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`மஹாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்தியைக் (கட்டாய) மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காக கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், மராத்தி மட்டுமே கட்டாய மொழி என அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகிறார்.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியைத் திணிப்பதற்கு எதிராக, பொதுமக்கள் பரவலாகக் கண்டனங்களை தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான், அவரது இந்த பேட்டி.
இந்திய பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும்.
1) தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மஹாராஷ்டிரத்தில் மராத்தியை தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல என்ற முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?
2) ஆம் என்றால் தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா?
3) கட்டாயமாக மூன்றாவது மொழியைப் பயிற்றுவிக்கவில்லை என்ற காரணத்துக்காக அநியாயமாக தமிழகத்துக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ. 2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?’ என்றார்.