
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.28) வெளிப்படுத்தினார்.
2025-26 பட்ஜெட்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`நிர்வாகத்தின் தூண்களாகவும், அரசின் கரங்களாகவும் அரசு ஊழியர்கள் விளங்குகிறார்கள். அகில இந்திய அளவில் தமிழ்நாடு பல வகையில் முதலிடத்திலும், முன்னொடி மாநிலமாகவும் திகழ்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரின் உழைப்பும் சீரிய பங்களிப்பும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
அரசு ஊழியர்களின் நலன் கருதி அவர்களுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்,
1) அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் பெறுவது இந்த ஆண்டே அமல்; 01.10.2025 முதல் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறலாம்.
2) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 01.01.2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும்.
3) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
4) அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்வி பயில ரூ. 1 லட்சமாகவும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ. 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
5) அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
6) அனைத்து வகை ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ. 500-ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தப்படும்.
7) ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ. 4,000-ல் இருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்படும்.
8) ஓய்வூதியங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை செப்டம்பர் 30-க்குள் அளிக்கப்படும்.
9) அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பில் தகுதிகாண் பருவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார்.