
திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 9) திறந்து வைத்துள்ளார்.
2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 8) திருச்சி மாவட்டத்திற்குச் சென்றார். முதலில், துவாக்குடி அரசு மாதிரி பள்ளியின் கட்டத்தை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த பின்னர், புத்தூர் அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், ரூ. 408.36 கோடி மதிப்பீட்டில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை இன்று (மே 9) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து முனையத்தில் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ரூ. 236 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூரில் அமையவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 129 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.