76-வது அரசியலமைப்பு நாள்: அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் உத்தரவு | Constitution Day |

போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது...
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
2 min read

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-வது ஆண்டை ஒட்டி அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நம் நாட்டில் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 1949 நவம்பர் 26-ல் நம் நாடு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரசியலமைப்பு அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 2015-ல் இருந்து அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 76-வது அரசியலமைப்பு தினம் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் கூட்டாட்சிக் தலையாய நோக்கம் ஆகும். கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15(3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.

இந்திய அரசியலமைப்பு ஈட்டத்தின் 76 வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2025 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள். தன்னாட்சி அரசு நிறுவனங்கள். அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள்! கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Stalin has ordered the reading of the Preamble to the Constitution of India and various competitions to be held in schools and colleges to mark the 76th anniversary of the Constitution of India.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in