
சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக, தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (டிச.23) முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டவை பின்வருமாறு,
`வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் 1961 தேர்தல் நடத்தை விதிகள், பிரிவு 93 (2)(அ)-ல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – ஹரியாணா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்களை பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசானது இந்த விதிகளில் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளில் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் பயம் ஹரியாணா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மஹாராஷ்டிர மாநிலத்தில் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்து அவர்கள் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலியாக இது அமைந்துள்ளது.
தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.