
வரும் மே 1 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணங்கள் அமலுக்கு வருவதை எதிர்த்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய வங்கி விதிகள் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, தற்போது அமலில் உள்ள வரம்பைத் தாண்டி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது.
அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி தற்போது ஏடிஎம் சேவையைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ. 21 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ரூ. 23 ஆக உயரவுள்ளது. இது தொடர்பாக விமர்சித்து, தன் எக்ஸ் கணக்கில் இன்று (மார்ச் 30) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று மத்திய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி, ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 23 வரை கட்டணம் பிடித்தம் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க பணக்காரர்கள் திளைக்கிறார்கள்’ என்றார்.