ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின்

செழித்து வளர்ந்த சிந்து வெளிப் பண்பாட்டின் எழுத்துமுறையை என்னும் நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின்
1 min read

சிந்து மொழி எழுத்து முறையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில், அவற்றை வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பண்பாட்டுக் கருத்தரங்கு இன்று (ஜன.5) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,

`தமிழ்ப் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில் மூன்று முக்கிய அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்.

செழித்து வளர்ந்த சிந்து வெளிப் பண்பாட்டின் எழுத்துமுறையை என்னும் நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகள் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிர் குறித்து உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், பொறியியல் தமிழறிஞர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் பலரும் இன்றளவும் முயற்சி செய்துவருகிறார்கள்.

அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையைக் கண்டுபிடித்து, சிந்து மொழி எழுத்து முறையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு, 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.

சிந்துவெளிப் பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில், தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஒரு ஆய்விருக்கை அமைக்க ரூ. 2 கோடி வழங்கப்படும்.

தமிழ் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர்கள், நாணயவியல்  வல்லுனர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in