தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வரும் ஏப்.29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும்.
தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
1 min read

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை ஒட்டி ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று (ஏப்.22) தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதாவது,

`தமிழ் மொழிக்குப் பாவேந்தர், திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர், தமிழினத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வகையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அழகு தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும், புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று எழுச்சி மிகுந்த வரிகளையும் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்னும் போர்ப்பாடலையும்,

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! என்ற வெற்றிப்பாடலையும், தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம், தூய தமிழரை தமிழ்கொண்டெழுப்பினோம் என்று எழுச்சி முரசு கொட்டியும் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு என்று திராவிடப் பண் பாடியும், காலத்தை வென்ற பாடல்களை நமக்குத் தந்தவர் பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழை வளர்த்தல் ஒன்று, சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதையை வகுத்துத் தந்தார் புரட்சிக்கவிஞர். 1929-ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தன பாவேந்தரின் பாடல்கள்.

1990-ல் பாவேந்தரின் படைப்புகளை கலைஞர் நாட்டுடைமை ஆக்கினார். இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ்த்தாயின் தவப் புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஏப்.29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in