

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்காக ரூ. 34.30 கோடியில் பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025 - 26 நிதியாண்டுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளை ரூ. 34.30 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்துள்ளது. இவற்றில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் நவீன சொகுசு பேருந்துகள்.
இதில், 20 நவீன குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சிவசங்கர், சுவாமிநாதன், சென்னை மேயர் பிரியா ராஜன், அரசு அதிகாரிகள் உள்ளிடோர் கலந்து கொண்டார்கள்.
எந்தெந்த ஊர்களுக்கு சேவை?
இதையடுத்து இந்தப் பேருந்துகள் சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகளை தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் உள்ள வசதிகள்
நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இவை, 15 மீட்டர் நீளம் கொண்டவை. பேருந்தின் முன், பின்பகுதிகளில் எண்ம வழித்தட பலகை உள்ளன. 2×2 இருக்கை அமைப்புடன் 51 இருக்கைகள் உள்ளன. பெரிய அளவிலான ஜன்னல்கள், சார்ஜிங் வசதி, பாதுகாப்பு அமைப்பு, கேமராக்கள், சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செமி ஸ்லீப்பர் வகையில், முழங்கால்கள் வரை நீட்டிக்க வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீ விபத்து ஏற்பட்டால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேருந்தின் உள்ளே தண்ணீர் தெளிப்பான்களுக்கான சிறப்பு குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரிவர்ஸ் சென்சார், அவசரகால வெளியேறும் வழி, வாகன செயல்திறன் மற்றும் கோளாறுகளை உடனுக்குடன் கண்டறியும் வசதி, வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்காணிக்க ஜிபிஎஸ் டிராக்கிங் அமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Chief Minister Stalin flagged off the operation of 20 Multi Axle Volvo Air Conditioned Busses at a cost of Rs. 34.30 crore for the State Express Transport Corporation.