கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் | Karur Stampede | MK Stalin |

கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் | Karur Stampede | MK Stalin |

தவெக தலைவர் விஜய் காலதாமதமாக வந்ததே முக்கிய காரணம் என்று விளக்கம்...
Published on

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்த முழுமையான விளக்கத்தைச் சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜய் காலதாமதமாக வந்ததே முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று மானியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, கரூர் துயரச் சம்பவம் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:-

“கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக அனைவரும் பேசுவதற்கு முன், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கக் கருதிய விதிமுறைகள் குறித்து இந்தப் பேரவை முன் வைக்க விரும்புகிறேன். கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது. இறந்து போனவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை நான் செலுத்துகிறேன், உறவுகளை இழந்தவர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27.9.2025 அன்று தமிழக வெற்றிக் கழக கட்சியினுடைய தலைவர் அவருடைய அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் இதற்காகப் பல்வேறு இடங்களில் அனுமதி கோரினார். அவர் கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை. 25.9.2025 காலை லைட் ஹவுஸ் கார்னர் அல்லது உடவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவுக்கும் கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை. பிறகு 26.9.2025 அன்று அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமிபுரத்தில், 27.9.2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

காவல்துறை முன்னேற்பாடுகள் என்ன?

கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையினர் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 18 ஆய்வாளர்கள் 75 உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் கரூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இது மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் 2 ஆய்வாளர்கள் 8 உதவி ஆய்வாளர்கள் 60 ஆயுதப்படை காவலர்கள் 20 அதி விரைவு படை காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் பாதுகாப்புப் பணிக்காக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 606 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அரசியல் பிரசார கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர் எண்ணிக்கையை விட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கால தாமதமே காரணம்:

கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சி தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வர தொடங்கிவிட்டனர். 27.9.2025 அன்று அக்கட்சியின் தலைவர் சென்னையிலிருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்டு 9:25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார் அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார் அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணி கடந்து 7 மணி நேரம் கழித்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஏற்பாடுகள் செய்யப்படவில்லை:

இங்கே அனைத்து கட்சி சார்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சம்பவம் நடந்த அதே வேலுச்சாமிபுரத்தில் இதற்கு 2 நாள்களுக்கு முன் (25.9.2025) அன்று எதிர்கட்சி தலைவர் கலந்து கொண்ட பிரசார நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12,000 முதல் 15,000 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். அந்த பிரசார கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்களும் 30 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தக் கட்சியினுடைய நிகழ்ச்சி நடந்துள்ளது.

காவல்துறை பரிந்துரையை தவெக தரப்பு கேட்கவில்லை:

கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடிக்குப் பின் கேரவன் வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும் கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பிரசார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும் கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பிரசார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகில் நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறி சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியினுடைய இணை செயலாளரிடம் பலமுறை தொடர்பு கொண்டு பிரசார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும் அவர் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் தனது உரையை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார் காவல் துறையின் விதிமுறை வழிமுறைகளை மீறி வாகனம் அக்ஷயா மருத்துவமனையிலிருந்து 30 - 35 மீட்டர் தூரம் சென்றது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது.

ஆம்புலன்ஸ்கள் ஏன் வந்தன?:

கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பீதி மூச்சு திணறல் மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள். கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து தகர கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும் சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை. காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகளில் முழு ஈடுபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தமிழக வெற்றிக் கழக கட்சியினர் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் மீட்பு பணிகள் தடைப்பட்டன. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு குற்றவாளி இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டது:

கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறிந்த உடனேயே தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், முதன்மை செயலாளர் தேசிய நல்வாழ்வு குடும்ப நல இயக்குநர், உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டார்கள். மேலும் அன்று இரவே நானும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். கரூர் துயரத்தை கேள்விப்பட்டதும் என்னால் ஓய்வில் இருக்க முடியவில்லை. அதனால்தான் உடனடியாக கரூருக்கு அன்றைய இரவே சென்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு மருத்துவரிடம் ஆலோசித்து உத்தரவு பிறப்பித்தேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள்.

மருத்துவனையில் என்ன நடந்தது?

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7:47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டார்கள். பொது சுகாதார இயக்கம் தலைமையில் கூடுதல் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டன. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 700 படுக்கைகளோடு எந்த அவசர நிலையும் சமாளிக்க எதுவாக கூடுதலாக 400 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி அவசர சிகிச்சை மையம் சிடி ஸ்கேன் ஆய்வகங்கள் உள்ளன. பணிகளை விரைவுபடுத்திட திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ குழுவினர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உதவி மையம் அமைத்து இறந்தவர்களின் உடல்களை காவல் துறை உதவியோடு அடையாளம் கண்டு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை அலுவலர்களின் உதவியோடு உடற்கூறாய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். கரூருக்கு அருகில் உள்ள சேலம் நாமக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து சிறப்பு மருத்துவ குழுக்களோடு 27.9.2025 அன்று இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இது தவிர திருச்சி திண்டுக்கல் கோயம்புத்தூர் புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்தும் சிறப்பு மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக வல்லுநர்கள் பிரேத பரிசோதனை உதவியாளர்கள் என மொத்தம் 152 பேர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பி இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 41 இதில் ஆண்கள் 13 பேர் பெண்கள் 18 பேர் குழந்தைகள் 10 பேர்.

உடற்கூறாய்வு செய்யப்பட்டதன் காரணம்:

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதனைப் பெட்டி வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் அன்றைய இரவில் உடற்கூறாய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவருடைய சிறப்பு அனுமதி பெற்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக உடற்கூறாய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட்ட துக்கத்தில் இருக்கக்கூடிய குடும்பங்களிடம் உடல்கள் ஒப்படைக்க வேண்டி அரசு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறை தலைவர் சங்கரின் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவி பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது 28.9.2025 அன்று அதிகாலை 1:45 மணிக்கு முதல் உடற்கூறாய்வு துவங்கப்பட்ட 28.9.2025 அன்று மதியம் 1 மணி அளவில் 39வது உடற்கூறாய்வு முடிவுற்றது காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் 27.9.2025 அன்று கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குழுமிய பெரும் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி எந்த ஒரு சம்பவம் ஏற்படாமல் கவனித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் நிவாரணம்:

துயரமான இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. தீவிர காயமடைந்த 47 நபர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்ற 55 நபர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் என மொத்தம் 143 நபர்களுக்கு ரூ. 4.84 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

கரூர் சம்பவம் குறித்த விசாரணைகள்:

இந்த சம்பவத்தை விசாரிக்க 28.9.2025 அன்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.10.2025 அன்று ஐஜி அசரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை சட்டப்படி விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல் மருத்துவ உதவி நிவாரண விநியோகம் அனைத்தும் சரியான முறையில் நடந்தன. இது போன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்காக ஒப்படைக்கப்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உயிரே முக்கியம்! விலைமதிப்பற்றது:

நான் எனது 50 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன் நடத்தியும் இருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தும்போது அதற்குரிய சட்டத்திட்டங்களும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறும்போது அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சிகள் நடத்தும் கட்சியினுடைய தொண்டர்கள் தான் நமது தமிழ்நாடு மக்கள்தான். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவிய போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக எந்த அரசியல் கட்சி தலைவரும் தன் கட்சி தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமன்றி அரசின் உயரதிகாரிகள் காவல் துறையின் உயரதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையை காணொளி ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தினார்கள்.

தற்போது உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்பதை உறுதியோடு நான் இங்கு சொல்லுகிறேன். அதே நேரத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும் பொது அமைப்புக்களும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம் மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன் வணக்கம்.

logo
Kizhakku News
kizhakkunews.in