அதிமுக உட்கட்சி விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை கோரி, எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதிமுக உட்கட்சி விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
1 min read

அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று (பிப்.12) உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி 2023-ல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில், இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

தனது புகார் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்பதால், `அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கூடாது’ என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சூரியமூர்த்தி.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், வா. புகழேந்தி உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டு 4 வாரங்களில் சூரியமூர்த்தி மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.பி. சி.வி. சண்முகம், ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி. ராஜலட்சுமி, பெங்களூரு வா. புகழேந்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை கோரி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமர்வு அதிமுக உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை கடந்த பிப்.7-ல் நிறைவு பெற்றது.

இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, எடப்பாடி பழனிசாமியின் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து இன்று (பிப்.12) உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in