
வங்கக் கடலில் வரும் அக்டோபர் 14 அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 12 முதல் 15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மற்றும் திருப்பூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு அக்டோபர் 15-க்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்று காலையும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, அக்டோபர் 14 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிடுகையில், "வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இந்தத் திசையில் நகரத் தொடங்கினாலே, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் நிறைய மழைப் பொழிவு இருக்கும். எனவே, அக்டோபர் 14 முதல் 17 வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் பரவலாக மழை பெய்யும். ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் நல்ல மழைப் பொழிவு இருக்கும்
ஒருவேளை, இது வட தமிழ்நாடு பகுதியை நெருங்காமல், நேரடியாக மத்திய ஆந்திரப் பகுதியை நோக்கி நகர்ந்தால் மட்டுமே வட தமிழ்நாடு மழைக்கான வாய்ப்புகளை இழக்கும். ஆனால், இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 20% தான் இது நிகழ வாய்ப்புள்ளது" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.