சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 65%: அறிக்கை வெளியீடு

"மீதமுள்ள 35 சதவீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது."
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 65%: அறிக்கை வெளியீடு
2 min read

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 65% மத்திய அரசின் பங்கு என மத்திய அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் மொத்தம் 118.9 கி.மீ. தூரத்துக்கு 128 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது. மாதவரம் முதல் சிப்காட் வரை (வழித்தடம் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (வழித்தடம் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (வழித்தடம் 5) என மூன்று வழித்தடங்களில் இந்தத் திட்டம் அமையவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு இரு நாள்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு நீண்ட நாள்களாக விமர்சனம் செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அவரிடம் வலியுறுத்தினார். இந்தச் சூழலில்தான் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மொத்தம் ரூ. 63,246 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் மத்திய அரசு ரூ. 7,425 கோடி நிதி ஒதுக்குகிறது. ரூ. 33,593 கோடி கடன் மூலம் பெறப்படுகிறது. மீதமுள்ள ரூ. 22,228 கோடியை மாநில அரசு செலவிடுகிறது.

திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ. 63,246 கோடியும் மத்திய அரசால் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடன்மூலம் பெறப்படும் நிதியும் மத்திய அரசின் வழியாக கிடைப்பதால் இது மத்திய அரசின் பங்காகவே கருதப்படும் என்ற வகையில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 5 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 63,246 கோடி. இந்தத் திட்டம் இதுவரை மாநில அரசின் திட்டமாகவே இருந்து வந்தது. எனவே, திட்ட மதிப்பீட்டின் 90 சதவீத நிதியைத் திரட்ட வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் இருந்தது. மொத்த மதிப்பீட்டில் 10 சதவீதம் நிதி வழங்குவது மட்டும்தான் மத்திய அரசின் பங்காக இருந்தது.

இருந்தபோதிலும், மாநில அரசு நிதி திரட்ட மத்திய அரசு உதவியது. மாநில அரசுக்கு நேரடியாகக் கடன் கிடைக்கும் வகையில் பன்னாட்டு ஏஜென்சிகளிடமிருந்து ரூ. 32,548 கோடியைத் திரட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதில் ரூ. 6,100 கோடி ஏற்கெனவே செலவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் மூலம், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ஏறத்தாழ 65 சதவீத நிதியை மத்திய அரசுதான் வழங்குகிறது. கடன் தொகை ரூ. 33,593 கோடியும், சமபங்கு மற்றும் துணைக் கடன் ரூ. 7,425 கோடியும் இதில் அடங்கும். மீதமுள்ள 35 சதவீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்குப் பெறப்படும் கடன்கள் நேரடியாக மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கடனாகவே கருதப்படும். இவை மத்திய அரசின் நிதிநிலையிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் வரை கடன் வழங்குவது அல்லது கடனுக்கு ஏற்பாடு செய்வது போன்ற பொறுப்பு மாநில அரசின் வசம் இருந்தது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் மூலம், ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு ஏஜென்சி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட ஏஜென்சிகளிடம் மத்திய நிதியமைச்சகம் முறையிடும். இந்தத் திட்டத்துக்கான கடன், திட்டம் தொடர்புடைய ஒப்பந்தங்கள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

திட்டத்துக்காக வழங்கப்படும் கடனானது மாநில அரசுக்கு வழங்கப்படுவது போல் அல்லாமல் மத்திய அரசுக்கு வழங்கப்படுவது போல மாற்றப்பட வேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மத்திய அரசுக்குக் கடன் வழங்கி, கடனானது பிறகு மத்திய அரசின் நிதிநிலையிலிருந்து சென்னை மெட்ரோ ரயிலுக்கு நேரடியாக விடுவிக்கப்படும். கடன் வழங்கும் நிதி நிறுவனத்திலிருந்து மாநில அரசு வழியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டைச் சென்றடைவதற்குப் பதில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மத்திய அரசின் வழியாக நேரடியாகச் சென்றடையவுள்ளது. மாநில அரசுக்குப் பதில் நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சகம் திட்ட செயலாக்கத்தின் அமைப்பாக செயல்படவுள்ளது. இதுதொடர்புடைய ஆவணங்கள் குறித்தும் மத்திய நிதியமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கடன்களில் மேற்கொள்ளப்படும் மாற்றம், திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் மற்றும் அதுதொடர்புடைய ஆவணங்கள் உள்ளிட்டவற்றுக்கான நடைமுறை தொடங்கிவிட்டது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடைமுறை விரைவில் நிறைவடையும். கடனைத் திரும்பச் செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டைச் சார்ந்தது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் தொடங்கும். அதாவது ஏறத்தாழ திட்டம் நிறைவடையும் சமயத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் தொடரும். இந்தக் காலகட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நிறுவனத்துக்குத் தேவையான நிதியுதவியை வழங்கி கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in