நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயரும் முஸ்லிம்கள் நீக்கமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமையைத் துரிதமாக வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதிலும் போராட்டம் வெடித்தது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதிலும் அமலுக்கு வராமல் இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டம் டிசம்பர் 9, 2019-ல் மக்களவையிலும், டிசம்பர் 11, 2019-ல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் டிசம்பர் 12,2019-ல் ஒப்புதல் அளித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக குடியுரிமை திருத்தச் சட்டம் இருந்தது. மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திருத்தச் சட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்புகள் உள்ள நிலையில், இது அமலுக்கு வந்துள்ளது.