குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம்

"சென்னையைப் பொறுத்தவரை கனமழைக்கான அச்சம் தேவையில்லை."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

வங்கக் கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகம், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக, அடுத்து வரும் 4 நாள்கள் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 14 அன்று கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் 15 அன்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை அடுத்த இரு நாள்கள் தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் சூறாவளிக் காற்றானது மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 256 மி.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 259 மி.மீ. இயல்பைவிட இது 1 சதவீதம் குறைவு.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. இது ஏற்கெனவே கடலுக்கு அருகில்தான் உள்ளது. மெதுவாக நகர்ந்து கரையைக் கடந்து செல்லும். சென்னையைப் பொறுத்தவரை கனமழைக்கான அச்சம் தேவையில்லை. தற்போது பெய்வதைப்போலவே மழை இருக்கும்" என்றார் பாலச்சந்திரன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in