தமிழ்நாட்டில் சேதமடைந்த அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பழைய பேருந்துகள் சீரான இடைவெளியில் மாற்றப்பட்டு வந்தாலும், சேதமடைந்த பல அரசு பேருந்துகள் தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக வெளியானதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது.
போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து, பேருந்துகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.